.

All About Keelapavoor

Showing posts with label reading. Show all posts

பசுமை மாணவர் இயக்கம்

நமது ஊர் தூய்மையான சுவாசத்திற்கு தயாராகி வருகின்றது, அது எப்படி என்பதை அறிவதற்கு முன் சில முன்மொழிதல் இருக்கிறது. அவற்றை கவனிப்போம்.

மனித உயிரினம் பல்கிப் பெருக ஆரம்பித்தபோது, வாழ்வதற்கான ஆதாரத் தேவைகளைப் பெறவும் ஓரிடத்தில் நிலையாக தங்கி வாழவும் சில அடிப்படைகளை இயற்கையிடமிருந்து தகவமைத்துக் கொண்டார்கள். அப்படி உருவானவைதான் விவசாய நிலங்களும், உறைவிடத்திற்கான குடில்களும். ஒரு எடுத்துக்காட்டிற்கு நமது ஊரையே எடுத்துக்கொள்வோமானால், தெருப்பெயரை கவனியுங்கள் கீரைத் தோட்டத்தெரு, சந்தைத் தோப்புத்தெரு, சந்தைக் கிணறு தெரு என்றும் பெரும்பாலான தெருக்களில் கிணறும் இருக்கும். காலப்போக்கில் பல தெருப்பெயர்கள் மாறியிருக்கலாம் பல கிணறுகள் நீரின்றி குப்பையாலும் மண்ணாலும், பெரும்பாலும் குப்பையாலேயே மூடப்பட்டிருக்கும். இன்று சில கிணறுகள் மட்டும் எஞ்சியிருக்கின்றன, அதுவும் நீரில்லாமல் குப்பைக்கழிவால் நிறைந்து கிடக்கின்றது முடிவு நாளை எண்ணிக்கொண்டு. இவையெல்லாம் ஒரு காலத்தில் தோப்புகளாக இருந்தவைதானே, மக்கள் எண்ணிக்கைப் பெருகப்பெருக தோப்புகள் வீடுகளாக மாறியதையும், பொது இடங்கள் கருவேலங் காடாக மாறியகதையும் நாம் அறிவோம்.

இந்த கிணறுகள் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருப்பது போல ஊர் பொது நிலங்களும் கருவேலம்  மற்றும் சீமைக்கருவேலம் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த மரங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நிலத்தடி நீரை உறிஞ்சியும், மழை நீர் நிலத்தை அடையாமலும், பிற தாவரங்களை வளர விடாமலும், நன்னீரையெல்லாம் உப்புநீராக மாற்றிக்கொண்டும் இருந்து வந்தது. இந்த மரம் சுதந்திர இந்தியாவில் விறகிற்காக பயன்படட்டும் என்று இதன் பின்விளைவறியாமல் அரசே முன்னின்று விதைத்தாக தெரிகிறது. அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியென்று அறியாமையில் இம்மரங்களை வளரவிட்டிருக்கிறோம்.

 இப்போது இந்த நிலையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்க்கமுடிகின்றது, சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தபோது கருவேல மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட பொது இடத்தில் சில மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கு கூடையாக வேய்ந்த மூங்கில் வேலி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. நண்பர்களிடத்தில் விசாரித்தபோது சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் குழுவொன்று தோன்றி மிக ஆழமாக விதைத்து வருகிறார்கள் என்றறிந்தோம். இவர்கள்தான் தூய்மையான சுவாசத்தை நமக்கு பரிசளிக்கும் முயற்சியில் களம் கண்டிருக்கிறார்கள். முன்னாள் சனாதிபதி அப்துகலாம் அவர்களின் நினைவாக “பசுமை கிராம திட்டம்” என்ற பெயரில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். பதினைந்துபேரைக் கொண்ட இவர்கள் இதுவரையிலும் முன்னூறு பயனளிக்கும் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள்.



இந்த செயல்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, ஏனென்றால் கருவேல மரங்கள் எளிதாக அழிந்துவிடக் கூடியவையல்ல. எத்தனை முறை வேரோடு பிடுங்கி எறிந்தாலும் மீண்டும் மீண்டும் தளிர்த்து வளரக்கூடியவை, இவைகளை ஒழிக்க வேண்டுமானால், இம்மாதிரியான சிறு சிறு முயற்சியகள் அதிக பயனளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


பசுமை மாணவர் இயக்கம் முற்றிலும் மாணவர்களால் இயங்கும் குழு என்பதனால் மரம் நட்டு பராமரிக்க இவர்களுக்கு பொருளாதாரம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்பது நிச்சயம். இவர்களுக்கு ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்துக்கொண்டிருக்கிறது. 

முதல் கட்டமாக காமராஜர் சாலை (கீழப்பாவூர் மைதானம் முதல் திருநெல்வேலி சாலை வரை) 75 மரகன்றுகள் நட்டனர். 


அடுத்து மைதானத்தை சுற்றியுள்ள பகுதியில் 100 மேற்பட்ட மரகன்றுகளையும் 

கீழப்பாவூர் வங்கி பேருந்து நிறுத்தத்திலிருந்து மைதானம் வரையிலும் 60 மரகன்றுகள்  நடுவதற்குரிய மரக்கன்றுகளை வழங்கி மாணவர்கள் உற்சாகத்தோடு களப்பணியாற்ற உதவி செய்து வருகிறார்கள் ஆசிரியர் திரு.சந்தானம் மற்றும் திரு.பரமசிவம் (சுடர் டெக்கரேசன்) அவர்கள்.


மரங்களை நடுவதோடு நிற்காமல் அதனை தொடர்ந்து பாதுகாத்து பேணிவரும் இப்”பசுமை மாணவர்கள் இயக்கம்” கொண்டிருக்கும் பசுமை நம்பிக்கையை தக்கவைக்க நாமும் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை மறுக்க இயலாது. நாளைய சமூகம் நீரில்லாமல் நின்று விழிப்பதை தடுக்கும் இன்றைய இச்சிறு முயற்சி நாளை விருட்சமாக வளரும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டு வருகின்றது.



இவர்களுடைய முயற்சியில் பங்கெடுத்து களம் காண விரும்புவோர் அல்லது பண உதவி செய்ய முன்வருவோர்கள் இக்குழுவினரை தொடர்பு கொள்ளலாம். இது நமக்கும் நமது ஊருக்கும் கிடைத்திருக்கும் புதிய நம்பிக்கை இதை வளர்த்தெடுப்பதைத் தவிர நாம் எதுவும் செய்துவிடப் போவதில்லை.


வாருங்கள் வளரும் தலைமுறையோடு கைகோத்து நிற்போம்.


பசுமைப் பாவூரின் வளர்ச்சியில்
பசுமை மாணவர் இயக்கம்

தொடர்பு எண்: 9790083683




Written By 
J.Pandiaraj 
Keelapavoor.com Team

Learn more »

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தரராமசாமி - நூல் 3

ஒரு புளியமரத்தின் கதை எனும் நாவல் சுந்தரராமசாமி அவர்களால் எழுதப்பட்டது,நாவல் உலகில் இந்திய அளவில் நேரடியாக கீப்று மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் நூல்.



           புளியமரத்தை மையப்படுத்தி அதன் சுற்றில் ஏற்படும் வளர்ச்சியின் மாற்றங்களையும்   நடைபெரும் நிகழ்வுகளையும் அழகுடன் கூறிச்செல்கிறது,
நாவலில் வரும் தாமோதர ஆசானை அறிவுடன் ரசிக்க முடிந்தது  அவர் போன்ற கதை சொல்லியொருவர் நமக்கு கிடைக்கவில்லை எனும் ஆதங்கம் அவர் கதை சொல்லும் பொழுதிலெல்லாம் வந்து சென்றதை தவிர்க்க இயலவில்லை. அதேபோல் அவருக்கு பிரியமான யாழ்பாணம் சுருட்டு வெற்றிலை வாங்கிக்கொண்டு கதை கேட்க வரும் சிறுவர்களை வாசிக்கையில், எனது தாத்தாவுக்கு பீடியும் அஞ்ஞால் அலுப்பு மருந்தும் வாங்கிச்செல்வது நினைவில் வந்து போவதையும் தவிர்க்க முடியவில்லை.

           குளத்தின் மையத்தில் சிறு தீவுபோல காட்சிதரும் புளியமரம்
நிலத்திற்கு இடம்பெயர்ந்ததை ஆசான் கூறும் மகாராசாக் கதை மூலம் தெரிந்து கொள்ளமுடிந்தது. செல்லம்மாள் மரக்கிளையில் தூக்கிலிட்டுக் கொண்டது,மகாராசா கால்பந்து பார்த்து கண்ணீர் விட்ட கதையென
ஆசானின் ஒவ்வொரு கதையின் மூலம் புளியமரத்தின் மற்றும் புளிக்குளம் ஊரின் வரலாறையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

           நகரமயமாக்கலின் ஆரம்பமாக காத்தாடிமரங்கள் அளிக்கப்பட்டு பூங்கா உருவானதும், புளியமரத்தை சுற்றி கடைகள் கிளை விரித்ததும்,
சாதி மத வேறுபாட்டிலும், துரோகங்களிலும் அரசியல் காழ்புணர்ச்சியிலும் மௌனசாட்சியாய் நிற்கும் புளியமரத்தை மையங்கொண்டு மனிதர்கள் பிளவு படுவதை சுட்டிக்காட்டி இந்த நாவல் அற்புத இலக்கியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

           தமிழ் இலக்கியத்தின் மைல்கல் என கூறப்படும் இந்நாவல் வாசிப்பவர் மனத்தில் நிச்சயம் சிறுதாக்கத்தை ஏற்படுத்திவிடும்....
Learn more »

என் இனிய இயந்திரா - சுஜாதா - நூல் - 2

                  நாம் அறிவியலை எந்த அளவிற்கு அறிந்து வைத்திருக்கிறோம் என்று கேட்டால், பெரும்பாலானோர் என்ன பதில் தருவார்கள்?. இன்றைய காலம் நம்மை அடிப்படை அறிவியலிலிருந்து விலக்கியே வைத்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. நவீன அறிவியலை நமது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளாமல், நம்மை அடிமைப் படுத்தும் சாதனமாக உருமாற்றி கையிலும் மடியிலும் சுமந்துகொண்டு திரிகிறோம். ஆனால் நவீன அறிவியலை பயன்படுத்தி ஒரு நகரத்தை இப்படியும் வடிவமைக்க முடியும் என்பதை எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பெற்ற ஒரு அறிவியல் புனைவு நூலை இன்று அறிமுகம் செய்துகொள்வோம்.

“என் இனிய இயந்திரா” எனும் நூல் எழுத்தாளர் சுஜாதா அவர்களால் எழுதப்பட்டது, கணினித்துறை தன் கால்களை அகலப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டது. மனிதனின் அத்தனை வேலைகளையும் ஒரு எந்திரம் செய்யத் தொடங்கினால்?.

சுஜாதா ஒரு அறிவியலாளர், எழுத்தாளர், திரைபடத்திற்கு வசனம் எழுதுபவர் என பன்முகம் கொண்டவர். திரைத்துறையில் இவரை அதிகமாக பயன்படுத்திக் கொண்டவர் இயக்குனர் சங்கர். என்ன எந்திரன் படம் நினைவில் வருகிறதா?. இந்த படத்திற்கும் நாவலுக்கும் நிச்சயம் அதிக தொடர்பு உண்டு.

நிலாவுக்கும் சிபிக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள அரசிடமிருந்து அனுமதி கடிதம் கிடைப்பதில் நாவல் தொடங்குகிறது. ரவி என்ற தனிமனிதன் அரசாங்கம் அனுமதியோடு வாடகைக்கு கிடைத்த அறைக்கு வருகிறான். இவனோடு ஒரு எந்திர நாயும் (ஜீனோ) உள்ளது. தமிழகத்தை ஜீவா எனும் சர்வாதிகாரி ஆட்சி செய்யும் நவீன காலகட்டம். இந்தியாவை யார் ஆட்சி செய்கிறார்கள் என்று குறுக்கு விசாரணை செய்யாமல் தொடர்ந்து வாசித்தால் தொழில்நுட்பத்தில் மிளிரப்போகும் அல்லது மிளிர வாய்ப்பற்றுப் போகும் சென்னையை பார்க்க முடியும். இந்த நகரில் மனிதர்களுக்கு பெயர்கள் கிடையாது ஆனால் எண் உண்டு. சொந்த வீடு கிடையாது, குப்பை அள்ளும், சாக்கடை அள்ளும் வேலையும் கிடையாது, அத்தனையும் எந்திரங்களால் செய்விக்கப்படுகிறது. சுரங்கத்தில் போகும் தொடர்வண்டியும் இருக்கிறது.

இந்த கதையின் நாயகன் ஜீனோ தான் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லாமல் கதை நகர்கிறது. ரவி வாசிக்கும் அத்தனை புத்தகங்களையும் வாசித்துவிடும் ஜீனோ சிந்திக்கும் ஆற்றலையும் பெற்றுவிடுகிறது.
சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் ஒன்று செயல்படுகிறது, ஜீனோவின் துணையோடு சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி மக்கள் ஆட்சி நிறுவுவதுதான் கதையின் பின்புலம்.


கீழிருக்கும் இணைப்பை பயன்படுத்தி நாவலை (PDF) பதிவிறக்கம் செய்து வாசியுங்கள். மறக்காமல் கருத்து பதிவு செய்யுங்கள் உறவுகளே...

http://www.mce89.com/_ld/0/66_En_Iniya_Endhir.pdf

சுஜாதாவின் மேலும் பல நூல்களை இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

https://drive.google.com/folderview?id=0B42iwZpbSKqQfmlJZlJKb3pqbHdseDlkSkVnVlp6SUFvQWp2RXU3ZXNhR3IxSnRkc0IxZ1k&usp=sharing






Learn more »

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் - நூல் - 1

திருக்குறளையும் பாரதியின் எழுத்துக்களையும், யாரெழுதியது என்ற நினைப்பேயில்லாமல் மனப்பாடம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட பல புலமைகளை பற்றிய அறிமுகம் பள்ளியிலேயே கிடைத்ததும், சிலவற்றை மனப்பாடம் செய்திருப்போம். அந்த எழுத்துக்கள் எங்கேனும் மூளையின் நரம்பிடுக்குகளில் தூசிபடிந்து கிடந்தால் அதை சீர்படுத்த உதவும் எழுத்துக்களை முதலில் அறிமுகம் செய்து பின் பழையன நோக்கிப் புகுதல் நலம் பயக்கும் எனக் கருதுகிறேன்.

வைரமுத்து அவர்களை தமிழகத்தில் அறியாதவர்கள் இருந்தால் அது குறிப்பிட்ட வயதுக்கு கீழுள்ள திரைப்படப் பாடல்கள் பற்றிய தெளிவான பிரக்ஞை இல்லாத சிறுவர்களாகத்தான் இருக்கும் மற்ற ஏனையரும் இவரை அறிவர். திரையுலகில் மட்டுமில்லாமல் இலக்கிய தளத்திலும் தனது தமிழ்த் திறனை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருதை இவரது கிராமத்து நாவல் படைப்பு ஒன்று பெற்றிருக்கிறது. அதைப்பற்றி வரும் வாரங்களில் ஒருநாள் பேசலாம்.

இளைஞர்களின் நிலைகண்டு வருந்தி, அவர்களை தன் நண்பர்களாக பாவித்து சில கட்டுரைகளை “சிற்பியே உன்னை செதுக்குகிறேன்” என்ற சிறு நூலில் எழுதியிருக்கிறார். இந்த கட்டுரைகள் வெறும் அறிவுரை என்ற தளத்தில் நின்று கொள்ளாமல் நம்மோடு உரையாடுகிறது. பொழுதுபோக்கு என்ற சொல்லையே தமிழிலிருந்து அழித்தொழிக்க வேண்டுமென்றும், பொழுது என்பது போக்குவதற்கு அல்ல ஆக்குவதற்கு என்று இயல்பான ஒரு தந்தைக்குறிய அல்லது நண்பனுக்குறிய நேசத்துடன் எடுத்துரைக்கிறது. திரைப்பாடல் எழுதுவது மக்களின் பொழுதுபோக்கிற்குத்தானே அதை முதலில் ஒழிக்கவேண்டாமா எனக் கேட்டால் நீங்கள் ஆக்கத்திற்கான தேடலுக்கு தயாராகிவிட்டீர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள்.

வாசிப்பு என்பது திரைப்படம் பார்த்துவிட்டு பிடித்திருக்கு பிடிக்கவில்லை என்ற நோக்கோடு விலகிச்செல்வது அல்ல. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகம் அல்லது அறிவார்ந்த தேடலுக்கு விதையாக இருப்பது. இந்த புத்தகமும் வாசிக்கும் நம்மிடம் சில லட்சியக் கேள்விகளை எழுப்பும், பொழுதாக்கங்களுக்கான தேடல்களுக்கு இட்டுச் செல்லும், நம்மைப் பற்றிய தேடல்களை துரிதப்படுத்தும்.
இந்த கட்டுரைத்தொகுப்பின் இறுதியில் இவர் தன் மகனுக்கு எழுதிய சில கடிதங்களை இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

ஓய்வு என்ற கட்டுரையின் பக்கங்களை இணைத்டிருக்கிறேன் வாசித்துப் பாருங்கள். வரும் வாரத்தில் சிறப்பானதொரு கதை புத்தகத்தை அறிமுகப் படுத்தலாம் என்றிருக்கிறேன். வாசிப்பவர்கள் தாங்கள் வாசித்த, வாசிக்கும் புத்தகத்தை பற்றி பின்னோட்டத்தில் எழுதலாம் விவாதிக்கலாம்.

அன்புடன்
ஜெ பாண்டியன்



Learn more »